பரமசைதன்யம்
விழிப்புணர்வின் தெய்வீக குளிர்ந்த காற்று
கடவுளின் அன்பின் இந்த உலகளாவிய சக்திக்கு பல்வேறு கலாச்சாரங்களில் பல பெயர்கள் உள்ளன: நியூமா (கிரேக்கம்), ருவாக் (எபிரேயம்), அஸ்ஸாஸ் (அரபு), தாவோ (சீனம்), புனித ஆத்மாவின் காற்று, வாழ்க்கை நீர். இருப்பினும், அவை அனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கின்றன, அன்பான, அறிவார்ந்த, அனைத்தையும் உள்ளடக்கிய படைப்பாற்றல். விழிப்புணர்வும் ஆற்றலும் முதன்மையான காரணிகள் ஆகும். மற்ற அனைத்தும் இரண்டாம் நிலை. இந்த காரண சக்தி அகிலம் முழுவதையும் ஊடுருவிச் செல்கிறது. ஸ்ரீ மாதாஜி இந்த எங்கும் வியாபித்திருக்கும் சக்தியை "பரமசைதன்யம்" என்று அழைக்கிறார்.
இந்த எங்கும் வியாபித்திருக்கும் சக்தி குளிர்ந்த காற்று அல்லது "நுண்ணதிர்வுகளாக" ஆத்ம விழிப்புணர்வுக்குப் பிறகு உணரப்படுகிறது, குறிப்பாக தலை உச்சியின் மேலும் கைகளின் உள்ளங்கைகளிலும் உணரப்படுகிறது. தியானத்தில், நமது குண்டலினி வெவ்வேறு சக்கரங்கள் வழியாக எழும்பும்போது, முதுகெலும்புக்குள் ஒவ்வொரு சக்கரத்தின் வெவ்வேறு இடங்களிலும், சில சமயங்களில் சக்கரங்களுடன் தொடர்புடைய குறிப்பிட்ட விரல்களிலும் நம் அதை உணர முடியும். இந்த நுண்ணதிர்வுகள் மெய்மையைப் பற்றிய முழுமையான படத்தை நமக்குத் தருவது மட்டுமல்லாமல், நமக்கும், நம் சக மனிதர்களுக்கும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இயற்கைக்கும் நன்மை பயக்கும் முழு சூழ்நிலையையும் உருவாக்குகின்றன.
சஹஜ யோக பயிற்சியாளர்கள் பலர், தெய்வீக அன்பின் இந்த நுண்ணதிர்வுகளின் துல்லியம் மற்றும் செயல்திறனைக் கண்டு வியப்படைந்தனர், அது நம்மை முழுமையாகச் சூழ்ந்து, நமது சுதந்திர விருப்பத்தில் குறுக்கிடாமல் நம் அன்றாட வாழ்க்கையில் நம்மை வழிநடத்துகிறது. ஒரு எளிய ஒப்புமை கூறவேண்டுமென்றால், எங்கும் பரவியிருக்கும் இணைய ஊடகமானது, நமக்கு வாழ்க்கையின் எந்தவொரு குறிப்பிட்ட துறையிலும் நிபுணத்துவ அறிவு இல்லாவிட்டாலும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது. இணையத்தைப் போலவே, நம் எங்கும் வியாபித்திருக்கும் இந்த இறைசக்தியுடன் நாம் சரியாக இணைக்கப்பட வேண்டும். இது, தினசரி தியானத்தின் மூலம் நாம் எளிதாக அடையலாம்.